இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் அளித்து வருகிறது. அரசின் சில முக்கியத் துறைகளிலும் இவர்கள் கால்பதித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்தியாவிலேயே முதல் காவல் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். 


இதையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா(36) வழக்கறிஞராக பதிவு செய்தார்.இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழகத்தில் ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த சத்யஸ்ரீ சர்மிளா என்பவர் இன்று பதவியேற்றார்.


இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சியடைகிறறேன். இதற்காக எனக்கு ஏராளமானோர் உதவியுள்ளனர். நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த, உதவி செய்த அனைவருக்கும் நன்றி. 


2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இன்று நீதித்துறையில் நான் சேர்த்துள்ளேன். அனைத்துத் துறையிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும். எனது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்னாலான உதவியை செய்வேன்" என்றார். 


சத்யஸ்ரீ சர்மிளா முன்னதாகவே வழக்கறிஞராகும் தகுதி பெற்றிருந்த போதும், சமூகத்தில் திருநங்கைகளுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் பதவியேற்க மாட்டேன் என முடிவு செய்திருந்தார். தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதல்  திருநங்கை வழக்கறிஞராக பதவியேற்றுள்ளார்.