தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தான் மிக அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியடைவதையும், உயர்வதையும் தடுக்க இந்த மாவட்டங்களில்  குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 


''தமிழ்நாட்டு சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், மேற்கு மாவட்டங்களில்  ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்யாமல் அப்படியே வயலில் அழுக விட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உழவர்கள் வளர்த்த பயிர்களை அவர்களே அழுக விடுவதை விட வேதனை வேறு எதுவும் இல்லை.


தமிழ்நாட்டில் மொத்தவிலை சந்தைகளில் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.3 என்ற விலைக்குச் சரிந்துவிட்டது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.12க்கு விற்கப்படுகிறது.  மொத்தவிலை சந்தையில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியை 45 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, கமிஷன் மற்றும் போக்குவரத்துச் செலவாக மட்டும் ரூ.40 செலுத்த வேண்டும்.


அத்துடன் தக்காளி பறிப்பதற்காக பணியாளர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.300 வழங்க வேண்டியுள்ளது. இந்தச் செலவுகளைக் கூட தக்காளி விற்பனை மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை என்பதால், தக்காளியைப் பறிக்காமல் விட்டு விடுவதாக உழவர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்தபோது தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போதும் உழவர்களுக்கு ஒரு கிலோ தக்காளிக்கு ரூ.35க்கு மேல் கிடைக்கவில்லை. இடைத்தரகர்கள்தான் பயனடைந்தார்கள். இப்போதும் ஒரு கிலோ தக்காளியைப் பறித்து சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு ரூ.4 வரை செலவாகும் நிலையில், அதற்கான விலையாக ரூ.3 மட்டுமே கிடைக்கிறது. தக்காளி விளைச்சல் அதிகரித்தாலும், குறைந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது உழவர்கள்தான் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக விளக்குகின்றன.


மேலும் படிக்க | நான் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை : இளவரசி..!


தக்காளி விலை வீழ்ச்சியால், விளைந்த தக்காளியைப் பறிக்காமல் வயலிலேயே அழுகவிட்டதன் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தக்காளி உழவர்கள்  அவர்களின் முதலீட்டை முற்றிலுமாக இழந்து, கடனாளியாகியுள்ளனர். அவர்கள் அடுத்த முறை தக்காளி சாகுபடி செய்ய அதிக வட்டிக்கு மீண்டும் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. பிற மாவட்டங்களைச் சேர்ந்த தக்காளி விவசாயிகளும் இதேபோன்ற அவல நிலையில்தான் உள்ளனர்.


தக்காளியை விளைவிக்கும் உழவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய இழப்பு ஏற்படுகிறது. அதை வாங்கி விற்கும் வணிகர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் லாபம் கிடைக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. அனைத்துக் காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம்தான் காய்கறிகளைப் பயிரிடும் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.


2020ஆம் ஆண்டில் கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு போன்ற 16 வகை காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்தக் காய்கறிகளைப் பயிரிடுவோருக்கு அனைத்துச் செலவுகளும் போக 20% லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. இதைவிடச் சிறப்பான திட்டத்தை பாமக கடந்த பல ஆண்டுகளாகப் பரிந்துரைத்து வருகிறது.



அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதற்காக வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம், அவற்றை அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் பாமக வலியுறுத்தி வரும் திட்டம் . உணவு தானியங்கள் தவிர அனைத்து வகை காய்கனிகளையும் அரசே கொள்முதல் செய்யும் போது, உழவர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.


மேலும் படிக்க | மேகதாது விவகாரத்தில் தோற்றால் வருங்காலம் நம்மை சபிக்கும்..உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன்


தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில்தான் மிக அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியடைவதையும், உயர்வதையும் தடுக்க இந்த மாவட்டங்களில்  குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும்; தக்காளியிலிருந்து சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பதற்கான சிறப்பு மண்டலங்களை அமைக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வருகிறது.


ஆனால், கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் தமிழக ஆட்சியாளர்கள் இந்த யோசனையை செயல்படுத்தத் தவறிவிட்டதுதான் தக்காளி உழவர்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணமாகும்.


தமிழ்நாட்டில் தக்காளி உழவர்கள் பாதிக்கப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், சிறப்பு மண்டலங்களையும், குளிர்பதன கிடங்குகளையும் அமைக்கும் திட்டம் ஆகியவற்றைத் தமிழக அரசு விரைந்து செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் அறிவிக்க வேண்டும்.


தக்காளி விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்''.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR