சென்னை: இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில், மழைக்கான செய்தி மக்களுக்கு நிம்மதியையே அளிக்கின்றது. கேரளா முதல் கர்நாடகா வரை சுமார் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் நிலவுவதால் இன்றும் நாளையும் வட தமிழகத்தின் சில மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை (Chennai), செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் அதன் தாக்கத்தைக் காட்டிகொண்டிருந்தாலும், கத்திரி வெயிலுக்கு முன்னும், அது தொடங்கிய பின்னும் அவ்வப்போது பெய்து வரும் மழையால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


முன்னதாக, தென்காசியில் மேலகரம், இலஞ்சி, செங்கோட்டை, குற்றாலம், கொட்டாகுளம், காசிமேஜர்புரம், குத்துக்கல்வலசை ஆகிய இடங்களில் நேற்று மழை பெய்யத் தொடங்கியது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் நல்ல மழை காரணமாக குற்றால அருவியில் நீர் விழத் தொடங்கியுள்ளது. எனினும், கொரோனா தொற்று (Coronavirus) காரணமாக மக்கள் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. 


ALSO READ: நீர்பாசனத்துறை அமைச்சராக பதவி ஏற்றார் துரைமுருகன்!


நேற்று மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தொடர் மழை காரணமாக நீராவி அருவி, முள்ளிக்கடவு ஆறு ஆகியவற்றில் நீர் பெருகியது. மாவரசியம்மன்கோயில் மற்றும் மலட்டாறு பகுதிகளில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பரவலான மழையால், முடங்கியாற்றிலும் நீர் நிறைந்து செல்கிறது. நீராவி அருவி, பல்லிளிச்சான் கணவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறு. இன்றும் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. 
மதுரையில் ஆரப்பாளையம், கோரிப்பாளையம், தல்லாகுளம், புதூர், பெரியார் , சிம்மக்கல், மாட்டுத்தாவணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இன்றும் மழைக்கான வாய்ப்பபுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


நாகை மாவட்டத்திலும் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது. மா, முந்திரி, எள், சணல், சவுக்கு போன்றவற்றின் சாகுபடிக்கு இந்த மழை உதவும் என விவசாயிகள் கூறுகிறார்கள். இது தவிர தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியுள்ளது. கல்லாறு, கும்பக்கரை, செலும்பாறு உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் நீர் வரத்து அதிகரித்ததால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடங்கியதிலிருந்தே அங்கு ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


ALSO READ: முதல்வரின் செயலர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR