பிரதமர் மோடியை வாரணாசியில் வைத்து நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தங்க. தமிழ்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடைப்பெற்று வரும் மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, கடந்த 25-ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் வாரணாசியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஊர்வலமாக சென்று கங்கை ஆற்றில் தீர்த்தம் ஊற்றி வழிபாடு நடத்தினர். 


இந்த நிகழ்ச்சியில் தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து பேசினார். 


இச்சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த பன்னீர் செல்வம், சொந்தகாரியமாக வாரணாசியில் இருந்த போது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க நேர்ந்தது என தெரிவித்தார். 


எனினும், தமிழக துணை முதல்வர் தனியாக சென்று பிரதமர் மோடியை சந்ததித்தது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 


இதற்கிடையில் இன்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்திப் பேசினார். 


அப்போது அவரிடம் வாரணாசியில் நடைபெற்ற துணை முதல்வர்- பிரதமர் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மக்களவை உறுப்பினர் பதவி வேண்டியும், தனக்கு ஆளுநர் பதவி கோரியும் ஓபிஎஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்துள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


மேலும் ஜெயலலிதா இருந்திருந்தால் ஓ. பன்னீர்செல்வம் இப்படி வாரணாசி வரைக்கும் சென்றிருக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார். வரும் மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாருக்கு உண்மையான கூட்டம் சேருகிறது என்பது மக்களுக்கு தெரியவ வரும் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.