தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கன மலையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்றைய வானிலை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது;


"தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எச்சரிக்கை தேவை. இந்த மாவட்டங்களைத் தவிர வெப்பசலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவு மழை பெய்யும். 


சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சம் 29 டிகிரியும் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தேவாலாவில் தலா 9 செ.மீ மழையும் , செங்கோட்டையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.