தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி புதுக்கோட்டை அருகே இஸ்லாமிய மக்கள் அம்புலி ஆற்றில் இறங்கி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 


சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சியால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு, குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 


கடந்த பல ஆண்டுகளாக பருவமழையும் மாவட்டத்தில் பொய்த்து விட்டது. அதிக விலை கொடுத்து, தண்ணீர் வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 


மாவட்டத்தில் மழை அதிக அளவு செய்ய வேண்டும் குடிநீர் பிரச்னை தீர வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆலங்குடி பகுதியில் உள்ள இஸ்லாமிய பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கடைகளை நேற்று காலை, 10.00 மணிமுதல் 11.00 மணி வரை ஒரு மணி நேரம் அடைத்தனர். பின்னர் ஆலங்குடியில் உள்ள அம்புலி ஆறு அருகே சிறப்பு தொழுகை மற்றும் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் செய்துள்ளனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.