Tamil Nadu Latest News Updates: சென்னையில் உள்ள டிடி தமிழ்‌ தொலைக்காட்சி  நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து 'இந்தி மாதம்' நிறைவு நாள் விழா நேற்று (அக். 18) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி இந்தி திணிப்பை நோக்கமாக வைத்து நடத்தப்படுகிறது என்றும் எதிர்வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பிரச்னை ஒருபுறம் இருக்க, ஆளுநர் ஆர்.என். ரவி (Governor RN Ravi) பங்கேற்ற இந்த இந்தி மாதம் நிறைவு விழாவில், தமிழ்த்தாய்‌ வாழ்த்து பாடிய போது,"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த செயலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவி மீது குற்றஞ்சாட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) ஆகியோர் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி ஆளுநரை திரும்பப் பெறவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர்.



'ஆளுநரா? ஆரியநரா?'


இதுகுறித்து முன்னதாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ஆளுநரா? ஆரியநரா? என கேள்வி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், அதில் அவர்,"திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். 


மேலும் படிக்க | ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் ஆளுநர் -உதயநிதி ஸ்டாலின் அட்டாக்


இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். 



ஆளுநர் அளித்த பதில்


முதலமைச்சருக்கு இந்த கண்டனத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் அளித்தார். ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில்,"முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நேற்று அக். 18) மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.


பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.



ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு  அறிமுகப்படுத்தப்பட்டது.


ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 


மேலும் படிக்க | தீபாவளி விடுமுறை : போனஸ் லீவு அறிவிக்குமா தமிழக அரசு? ஊழியர்கள் எதிர்பார்ப்பு


ஆளுநருக்கு ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்...


ஆளுநர் ஆர்.என். ரவி முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு பதிலளித்தார். நேற்றிரவு 10.30 மணியளவில் முதலமைச்சர் வெளியிட்ட அந்த அறிக்கையில் ஆளுநரிடம் சில கேள்விகளையும் எழுப்பி, தனது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். அதில் அவர்,"இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகள்...


'தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்' எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?. 'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?


'என்ன செய்தது மோடி அரசு?'


'ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள். ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!



'பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். 


மேலும் படிக்க | ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்


தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?  2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது" என சராமாரியாக குற்றஞ்சாட்டினார். 


கடந்த காலங்களில் ஆளுநர் பேசியது...


மேலும், ஆளுநர் திராவிடம் குறித்து இதற்கு முன் பேசிய சில விஷயங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதில் அறிக்கையில் நினைவுக்கூர்ந்துள்ளார். தொடர்ந்து அவர்,"கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா?... 'தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்' என்றும்; 'திராவிடம் என்ற கோட்பாடே  பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்' என்றும் கூறியதை மறக்க முடியுமா?, 'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?


தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா?, தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?. பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என 'எங்கும் இந்தி – எதிலும் இந்தி' என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.


'இது தற்செயலானது என எப்படி நம்புவது?'


ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?. சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?


உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, திராவிட நல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள். நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 


மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ