சென்னை: சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களில், திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கொரோனா தொற்று உச்சியில் இருந்த காலத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, உடனடியாக பல வித கொரோனா தடுப்பு நடவடிக்கைளை எடுக்கத் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதும், கொரோனா தொற்றின் (Coronavirus) அளவு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் (Ration Shops) இன்று முதல் பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால், கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்தது.


கடந்த மாதம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின்போது, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாட்களில் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இணையதளத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.


எனினும், தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துகொண்டிருந்ததால், இந்த பணி தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் (ஜூலை 1) புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி மீண்டும் தொடங்கவுள்ளது. 


இதற்கிடையில், மத்திய அரசு, ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு (Supreme Court) உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இந்திய குடிமகனாக இருப்பவர், நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலிருந்தும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். 


தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. ரேஷன் கடைகளிலும் (Ration Shops), கொரோனா நிவாரணத் தொகை, இலவச மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆகையால், தற்போது மீண்டும் கைரேகை பதிவு முறை தொடங்கப்படுகிறது.


ALSO READ: Tamil Nadu: ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு: அரசு அதிரடி அறிவிப்பு


இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில், “ கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4 ஆயிரம் இரு தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. ஜூன் மாதத்தில் நிவாரணத்தொகையுடன் 14 மளிகைப்பொருட்கள் வழங்கவும் ஆணையிடப்பட்டது. இதனைப்பெற ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத்தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.


புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்டு கார்டு) கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப்பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தற்போது நிவாரண உதவித்தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக வினியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால் 1-ந்தேதி (இன்று) முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: Ration Card: புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்ப்பது எப்படி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR