தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவர்கள் நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 45,380 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகரில் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவர்கள்  தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 147 பள்ளிகளில் இருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.


தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் கைப்பேசி எடுத்துவர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.