கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மாப்பிளையார் குளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தினை பார்வையிட முதல்வர் பழனிசாமி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற அவர் பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மார்கமாக புதுக்கோட்டை சென்றடைந்தார். பின்னர் புதுக்கோட்டையின் மச்சுவாடி, மாப்பிளையார் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகள் முதல்வருக்கு புயல் சேதம் பற்றி விளக்கம் அளித்தனர். இச்சம்பவத்தின் போது துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தனர். பின்னர் புயல் நிவாரண நிதியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் அளித்தனர்.


முன்னதாக புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.