சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரூபாய் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. அருகே ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது மணிமண்டபத்தினை தமிழக அரசு திறக்கவுள்ளது.


இன்று பகல் 12.15 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்


முன்னதாக, ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் கட்டப்படும், அவரது பிறந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் மேலும் சட்டசபையில் உருவப்படம் திறக்கப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி இந்தாண்டு ஜூலை மாதம் சட்டசபையில் படையாட்சியாரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது நினைவு மண்டபமும் வெண்கல உருவச் சிலையும் அமைக்கப்பட்டு மணிமண்டபம் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த ராமசாமி படையாட்சி?


1918, செப்டம்பர் 16-ஆம் தேதி பிறந்தவர் சிவ சிதம்பர ராமசாமிப் படையாட்சியார். மக்கள் இவரை எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் என அழைத்தனர். சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை 1951-ல் தோற்றுவித்தார். 1952-ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இவரது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டப்பேரவையில் 19 இடங்களிலும், நாடாளுமன்ற மக்களவையில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது, ராமசாமிப் படையாட்சியார் சட்டமன்ற உறுப்பினரானார்.


அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 152 பேரவை இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆதரவால் காங்கிரசின் ராஜாஜி தமிழக முதல்வரானார். பின்னர் 1954 ஆம் ஆண்டில் கர்மவீரர் காமராசரின் அழைப்பை ஏற்று காமராசர் தமிழக முதல்வராகவும் இவர் ஆதரவளித்தார், அதனால் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பும் அளிக்கப்பட்டார். பின்னர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும் ராமசாமிப் படையாட்சியார் தேர்வானார்.


இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற இவர், கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மறைந்தார். அந்நிலையில் 1993 ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவான போது அது, ‘விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்’ என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னரே அது ‘விழுப்புரம் மாவட்டம்’ என்று மாறியது.