மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காணும் வரை ரூபாய் 2,000 நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.


இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்திருந்தது. 


மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என அரசுத்தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.


இந்நிலையில், அதிகாரிகள் அரசாணையை திருத்தி வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களவை தேர்தல் காரணமாக, 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர் ஒத்திவைத்துள்ளனர்.