மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 21 நாட்கள் ஆகும் நிலையில், அச்சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மாணவர்கள் நலன் சார்ந்த விஷயத்தில் ஆளுனர் தேவையின்றி காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.


தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்த சட்டம் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் அச்சட்டம் தமிழக ஆளுனரின் ஒப்புதலுக்காக  ஆளுனர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஓரிரு நாட்களில் ஆளுனர் ஒப்புதல் அளித்து விடுவார்; அரிதிலும் அரிதாக ஏதேனும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகலாம். ஆனால், 3 வாரங்கள் முடிந்தும் ஒரு முக்கியமான சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க மறுப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.


அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் இருப்பது தான், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் தாமதம் செய்வற்கு காரணமாக இருக்குமோ? என ஐயப்படத் தோன்றுகிறது. அவ்வாறு ஐயப்படுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. ஏனெனில், இப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வருவதை விரும்பவில்லை என்பது போன்று தான் ஆளுனர் மாளிகையின் செயல்பாடுகள் தொடக்கம் முதலே அமைந்துள்ளன.


ALSO READ | இந்த அழகிய தமிழக கிராமத்தில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை: ரகசியம் என்ன?


மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதலில் சட்டம் கொண்டு வரப்படவில்லை. கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்களிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், அதற்குள்ளாக சட்டம் நிறைவேற்ற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கும்படி ஜூன் 15-ஆம் தேதி அமைச்சரவை கூடி ஆளுனருக்கு பரிந்துரைத்தது. அதையும் அரசு நேரடியாக செய்யவில்லை.  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பொன். கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் சட்ட ஆலோசனை பெற்றது.


ஆனாலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுனர் மறுத்து விட்டார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்கினால் போதுமானதல்ல. மாறாக, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி வழங்கப்படும் 25% இடங்களில்  பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசரச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆளுனர் மாளிகை யோசனை தெரிவித்தது. அதையேற்று அவசர சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பிறகும் இரு மாதங்களாக அவசர சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தான் கடந்த செப்டம்பர்  14-ஆம் தேதி கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகும் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் தயங்குவது ஏன்?


ஆளுனர் மாளிகையின் இந்த தேவையற்ற தாமதம் தான், அரசு பள்ளி மாணவர்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதில் ஆளுனருக்கு விருப்பம் இல்லையோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பது ஆளுனர் மாளிகையில் இருப்பவர்களுக்கு புரியாது; அடித்தட்டு மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த சமூகநீதியாளர்களுக்குத் தான் அது புரியும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன. முதன்முதலில் நீட் அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2018-19ஆம் ஆண்டில் 4 மாணவர்களுக்கும்,  2019-20 ஆம் ஆண்டில் 5 மாணவர்களுக்கும் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே 7.5% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.


நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அதன் முடிவுகள் அடுத்த ஒரு வாரத்தில், அதாவது வரும் 12&ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. அதற்கு முன்பாகவோ, முடிவுகள் வெளியான  ஒரு சில நாட்களிலோ மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிட வேண்டும். இத்தகைய சூழலில் ஆளுனர் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது. மருத்துவக் கல்வி கனவாகிப் போன அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சமூகநீதி வழங்க ஆளுனர் தடையாக இருக்கக் கூடாது.


எனவே, தமிழக ஆளுனர் இனியும் தாமதிக்காமல், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவு நிறைவேற துணை நிற்க வேண்டும்.