காவிரி வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது: கூறிய கமல்ஹாசன்!
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு, தற்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என அவர் கூறினார்.
ஆனால் காவிரிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியது ஆறுதல் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்துக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள போதும் கிடைக்கும் நீரை தமிழக அரசு பத்திரப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் அவர், இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் அப்போது தான் நதிகளை இணைக்க முடியும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். நிலத்தடி நீரை அரசு பாதுகாக்கவில்லை எனில் நாம் பாதுகாப்போம் என்றும் அவர் கூறினார்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது உதவாது என்ற அவர் தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது என்றார். வாக்கு வேட்டையில் காவிரி சர்ச்சையை தூண்டிவிட்டு தேசியம் மறந்து பேசுகிறார்கள் என்றும் கமல் குற்றம்சாட்டினார்.