புதுவை நியமன MLA-க்கள் இன்று முதன்முறையாக புதுவை சட்டப்பேரவையில் அனுமதிக்கப்பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுவையில் பாஜகவை சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 


பதவி பிரமாணம் செய்து வைத்தவுடன், அவர்கள் மூன்று பேரும் சட்டப்பேரவை இருக்கை, பேரவை வளாகத்தில் அலுவலகம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட MLA-க்களுக்கான சலுகை வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.


இதனையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமிநாராயணன், திமுக நிர்வாகி தனலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது.


இதனையடுத்து MLA லட்சுமிநாராயணன் இவ்வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பேரவைக்கூட்டத்துக்கு இருமுறை வந்த நியமன MLA-க்களை பேரவைக்குள் அனுமதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.


இதற்கிடையில் நியமன MLA-க்களை சபாநாயகர் சட்டப்பேரவைக்குள் அனுமதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நெருக்கடி ஒருபுறம் இருக்க, பேரவைக்குள் நியமன MLA-க்களை சட்டபேரவைக்குள் அனுமதிப்பதற்கான அழைப்பு கடிதத்தினை சபாநாயகர் MLA-க்களுக்கு அனுப்பி வைத்தார்.


இந்நிலையில் இன்று நியமன MLA-க்களாக நியமிக்கப்பட்ட பாஜக மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் முதன்முறையாக புதுவை சட்டப்பேரவையில் பங்கேற்றனர்.