சென்னை: தமிழக அரசின் ,முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 21-ம் தேதி ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம், பல கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


இது தொடர்பாக ராமமோகன ராவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர் திடீரென்று நெஞ்சுவலிப்பதாக கூறியதால், கடந்த 24-ம் தேதி அதிகாலை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.


இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராமமோகன ராவ், நேற்று காலை 10.30 மணிக்கு நிருபர்களை சந்திப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நிருபர்கள் குவிந்தனர்.


அப்போது ராம மோகன ராவ் கூறியதாவது:-


என்வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது, நான் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அ.தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. செய்திதொடர்பாளர் தீரன் ஆகியோர் இதைக் கண்டித்தனர். அவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கடந்த 21-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வருமானவரித் துறையினர் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது வருமான வரித்துறையினருடன் துப்பாக்கி ஏந்திய துணைராணுவத்தினர் பாதுகாப்புக்கு வந்தனர். என்னை அவர்கள் 26 மணி நேரம் வீட்டு காவலில் வைத்தனர். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இது சட்டத்திற்கு புறம்பான, முறையற்ற செயலாகும்.


அத்துடன் சோதனை நடத்த வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் காண்பித்த சர்ச் வாரண்டில் என் மகன் விவேக்கின் பெயர் தான் இருந்தது. அதில் என் பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது என் வீட்டில் சோதனை நடத்த அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. 


அவர்கள் என் வீட்டில் சோதனை நடத்த விரும்பினால், என்னை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். ஒரு தலைமைச்செயலாளரை இடமாற்றம் செய்வதற்கு ஒரு முதல்-அமைச்சருக்கு எவ்வளவு நேரம் ஆகி விடப் போகிறது?


எனவே என் வீட்டில் நடந்த சோதனை தவறானது, மேலும் இதை ஏற்க முடியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை.


என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த சோதனை நடந்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் பலருக்கு பெரிய தடையாக அமைந்திருக்கிறேன்.


இந்த சோதனையின்போது, என் வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் எடுத்து சென்ற பணம், தங்க நகை, வைரம், சொத்து ஆவணங்கள் குறித்த ஆதார பட்டியல் என்னிடம் பெரிய ஆதாரமாக உள்ளது. 


சோதனையின்போது என் வீட்டில் இருந்து ரூ.1,12,000 320 ரொக்கம் மற்றும் என்னுடைய மனைவி மற்றும் மகளிடம் இருந்து 40 முதல் 50 சவரன் நகை, 20 முதல் 25 கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்ட விநாயகர், வெங்கடேஸ்வரா, மகாலட்சுமி சாமி சிலைகளை கைப்பற்றினர். மற்றபடி பெரிய அளவில் எதையும் அவர்கள் எடுக்கவில்லை.


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலாளர் அறைக்குள் நுழைந்து சோதனை நடத்த அவர்களுக்கு தைரியம் வருமா?


தலைமைச் செயலாளர் அறையில் சோதனை நடத்த முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்றார்களா? தலைமைச்செயலாளர் அறையில் துணை ராணுவத்தினருக்கு என்ன வேலை?


1994-ம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நிர்வாக பயிற்சி பெற்றேன்.


7 மாதங்களுக்கு முன்பு அவர்தான் என்னை தலைமைச்செயலாளராக பணி அமர்த்தினார். அவருடைய உத்தரவுப்படிதான் நான் செயல்பட்டு வந்தேன். ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படிதான் நடந்து வந்தேன். 


தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியதாக கூறப்பட்டாலும், காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்பட்டாலும், அதற்கான அதிகாரபூர்வமான எந்த வித உத்தரவும் எனக்கு முறைப்படி இதுவரை கிடைக்கவில்லை.


வருமான வரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து, தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கி விட்டுனர் என்னை. இப்போதும் தமிழ்நாட்டுக்கு நான்தான் தலைமைச் செயலாளர். 


என் மகன் விவேக் அமெரிக்க நாட்டில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இப்போது நாடு திரும்பி உள்ளார். அவர் என்னுடன் இல்லை. அவர் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


என் மகன் என் வீட்டிற்கு வருவது கிடையாது. என் மகனுக்கும் அரசுக்கும் எந்தவிதமான வர்த்தக தொடர்பும் கிடையாது.


சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள என்னுடைய அறையிலும் என்னுடைய மகனுக்கு எதிரான வாரண்டை வைத்து சோதனை நடத்தி உள்ளனர்.


75 நாட்களாக நான்தான் அம்மாவை பாதுகாத்தேன். அம்மா இல்லாததால் இப்போது மாநிலத்தில் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. நான் மக்களுக்கு என் பணியைத் தொடர்வேன்.


முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு, வார்தா புயல் இவற்றையெல்லாம் நான் எப்படி கையாண்டேன் என தமிழக மக்களுக்கே தெரியும்.


மத்திய அரசிடம் தமிழக அரசுக்கும், தமிழகத்திற்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் மரியாதை இல்லை. தற்போதைய சூழ்நிலையில் எவருடைய வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினர் எப்போது வேண்டுமானாலும் சோதனை என்ற அடிப்படையில் நுழையலாம். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.


போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் என்னுடைய மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக என்னுடைய மகன் விவேக் இருந்து வந்தார்.


மருத்துவமனையில் அவர்கள் இருக்கும் அறையை சூழ்ந்து கொண்டு, என் மகன் விவேக்கை அங்கிருந்து வலுக்கட்டாயமாக மிரட்டி வெளியேற்றி உள்ளனர். 


இவ்வாறு அவர் கூறினார்.