உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் கொண்டும், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றப்படுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்க வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில்: 
தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.         தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். 


2.         வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின்  நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.


3.         சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.


4.         மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.


5.         மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.


6.         தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.


ALSO READ | தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்


7.         செய்தி - மக்கள் தொடர்புத் துறை ‘செய்தித் துறை’யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கட்தொடர்பும் அடங்கியிருக்கிறது.


8.         சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’  என்று வழங்கப்படவுள்ளது.


9.         பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனித வள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது.


10. வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுச் சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.
இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.


ALSO READ | முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.கஸ்டாலினுக்கு, இலங்கை MP விக்னேஸ்வரன் வாழ்த்து


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR