மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 


சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தர்பார் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, அது நல்ல விஷயம் என்றும் அவர்களை மனமார பாட்டுவதாகவும், வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். 


மேலும், தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் என்றும், ஏரிகள், குளங்களை போர் கால அடிப்படையில் தூர்வார வேண்டும் எனவும் தெரிவித்தார். அதோடு மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறினார். நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தமளிப்பதாகவும்,சரியான நேரத்தில் தபால் வாக்கு சீட்டு வந்து சேர வில்லை என்பதால் வாக்களிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.