வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


இதற்கான வேட்புமனு பரிசீலனை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளார் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் தீப லட்சுமி உள்ளிட்ட 31 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனிடையே, வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான திங்கள்கிழமை 3 பேர் மனுவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மக்களவைத் தேர்தலில் 18 சுயேச்சைகள் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.


இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அமமுக வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடாத நிலையில் சுயேச்சைக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.