பள்ளிகளில் போதிய அளவு தூய்மைப் பணியாளர்கள் நியமனம் தேவை என்றும், ஓராண்டாக சம்பளம் போடப்படாததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறார் எழுத்தாளர் விழியன் வலியுறுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசுப் பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டே கழிப்பறை மற்றும் வகுப்பறைகளைச் சுத்தம் செய்வதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முனொஉ  தூய்மைப் பணியாளர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டனர். தமிழக அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 30,798 பேர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஓராண்டாக மாத ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ‘பேரண்ட்ஸ்’ மீட்டிங்.! விதவிதமாக கோரிக்கை வைத்த பெற்றோர்கள்.!


இத்தனைக்கும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1,500 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.


பள்ளியில் தூய்மைப் பணி செய்வதால் வேறு வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றும், அரசு எங்கள் நலனில் கவனம் செலுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 



இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுத்தாளர் விழியன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 


''அன்புள்ள தமிழக முதல்வருக்கு,


கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் முன்களப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை அனைவரும் கண்கூடாகப் பார்த்தோம். பள்ளிகள் திறந்த பின்னர் தூய்மைப் பணியாளர்களே பள்ளிகளைச் சுத்தம் செய்து பாதுகாப்பான இடமாக மாற்றினார்கள். அவர்களுக்குக் கூடுதலான பணிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் பல பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களே இல்லை. 


1. ஒவ்வொரு பள்ளிக்கும் அது எத்தனை மாணவர்கள் இருந்தாலும் கட்டாயம் போதிய அளவு தூய்மைப் பணியாளர்கள் நியமனம் தேவை.


2. தமிழகம் முழுக்க ஏற்கெனவே பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தது ஓராண்டாக (பிப்ரவரி 2020 முதலே சம்பளம் போடப்படவில்லை என்கின்றனர்) சம்பளம் போடப்படவில்லை. இந்தக் காலத்தில் அவர்களுக்கான சம்பளத்தைக் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும். இவர்கள் எந்தத் துறையின் கீழ் வருவார்கள், யார் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள், எங்கே தேங்கி நிற்கின்றது என்ற விளக்கங்கள் எல்லாம் ஏதுமில்லாமல் உடனடியாக அவர்களுக்கு சம்பளம் போடப்பட ஆவன செய்யவும்.


3. இதுநாள் வரையில் உள்ளூர் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் தங்கள் கைக்காசில் அவர்களுக்கு உதவி வருகின்றனர். அரசே அவர்களுக்கான உதவிகளைச் செய்ய வேண்டும். பல துணிச்சலான முன்னெடுப்புகளை எடுக்கும் இந்த அரசு, உடனடியாக இதில் தலையிட்டுத் தேவையானவற்றைச் செய்ய வேண்டுகிறேன். இதன் மூலம் கட்டாயம் பள்ளிகள் சந்திக்கும் நெருக்கடியில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள். மாணவர்களின் சுகாதார நலனும் காக்கப்படும்.


குரலற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதே அறம்''.


இவ்வாறு விழியன் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம்: தசிஎகச வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR