Anant Ambani Pre Wedding Ceremony: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் தற்போது குஜராத்தில் நடைபெற்று வருகிறது. அவர்களது சொந்த ஊரான குஜராத்தின் ஜாம் நகரில் நேற்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழாதான் கடந்த சில நாள்களாக இணையத்தில் அதிக கவனம் பெறும் நிகழ்வாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் பெருச்செல்வந்தரான பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க், வெளிநாட்டு பாடகர் ரிஹானா, பாலிவுட் பிரபலங்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கான பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்களின் ஒன்றுகூடலாக ஜாம் நகரில் நடைபெறும் இந்த நிகழ்வு உள்ளது. 


மக்களுக்கு விருந்துடன் தொடங்கிய நிகழ்வு


முன்னதாக, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களை இந்த வார தொடக்கத்தில் ஒரு சமூக விருந்துடன் தொடங்கியது. அதாவது, ஜாம் நகருக்கு அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அம்பானி குடும்பம் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் மக்களுக்கு பல வகையான குஜராத்தி உணவுகள் பரிமாறப்பட்டது, முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி உள்ளிட்ட அக்குடும்பத்தினரும் மக்களுக்கு நேரடியாக உணவுகளை பரிமாறிய வீடியோக்களை நம்மால் பார்க்க முடிந்தது. 


மேலும் படிக்க | மக்களவை தேர்தல்... பிரச்சாரத்தில் பேசும் போது நெறிமுறைகளை கடைபிடிக்கவும்: ECI


இந்த நிகழ்வில் பேசிய ஆனந்த் அம்பானி தனது பெற்றோரான முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்தார். தனது குழந்தைப் பருவத்தில் தனது உடல்நலம் தொடர்பான போராட்டங்கள் குறித்தும் அப்போது பேசினார். ஆனந்த் அம்பானி பேசியபோது, முகேஷ் அம்பானி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீருடன் காணப்பட்டார். 


முட்களின் வலி...


"என்னை மிகவும் ஸ்பெஷலானவாக உணர்த்துவதற்கு முழுமையாக இறங்கியுள்ளனர். என் வாழ்வு முழுதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ரோஜா பூக்களின் மெத்தையில் முட்களின் வலியையும் நான் அனுபவித்திருக்கிறேன். 


சிறுவயதில் இருந்தே பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் என் அப்பா, அம்மா என்னை கைவிட்டுவிடவில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று உணர்கிறேன். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக நின்றார்கள்" என்று ஆனந்த் அம்பானி பேசிக்கொண்டிருக்கையில் முகேஷ் அம்பானியின் கண்களில் கண்ணீர் முட்டியிருந்தது. இதன் வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. 


ஜாம் நகர் விமான நிலையம்


முன்னதாக, ஜாம் நகரின் விமான நிலையம், மார்ச் 1ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாவை முன்னிட்டு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்புகளில் கடும் கண்டனங்கள் எழுந்தன. 


இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் அவரது X பதிவில்,"மோடி அரசின் மெகா 'மொய்'. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.  



6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை.  தமிழ்நாட்டுக்கு எதற்கு 4ஆவது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள்தான் இவர்கள்" என பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் முஸ்லிம் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு! NO சொன்ன உயர் நீதிமன்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ