டெல்லியில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கடந்த 9-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி நேற்று மதியம் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இது குறித்து தகவல் அறிந்ததும் பா.ஜனதா மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மருத்துவ மனைக்கு சென்று ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மலர்வளையம் வைத்து ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


இதைத்தொடர்ந்து பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஜெட்லியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இதில் ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த தகவலை பா.ஜனதா தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்தார்.


உடல் நலக்குறைவால் காலமான அருண் ஜெட்லிக்கு மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அருண் ஜெட்லி, கடந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடுவதை தவிர்த்தார். மேலும் தற்போதைய மத்திய அரசில் மந்திரி பதவி வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.