பெங்களூரு: பெங்களூருவின் கம்மானாஹாலி பகுதியில் இளம்பெண் பாலியல் தொல்லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பெங்களூரின் முக்கிய பகுதியான எம்.ஜி.ரோட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இதில் பெண்களும் கலந்துக் கொண்டனர். அப்போது, சிலர் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே, கிழக்கு பெங்களூருவில் ஜனவரி 1-ம் தேதி அதிகாலை சுமார் 1:30 மணியளவில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வழிமறித்து, வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர்.


மேலும், அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவானது. பெங்களூரு பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையே மேலும், இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.