எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். கோவா மாநிலத்தில், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பாஜக-வில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பாஜக-வின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது கருத்தை தெரிவிக்கையில்., "பணபலத்தை பயன்படுத்தியும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்தும் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கும் சதித்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.



இந்த மாநிலங்களில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக படு தோல்வி அடைந்தது. அதனால் ஏற்பட்ட விரக்தியால் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


கர்நாடகாவிலும், கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்று வருகிறது. இது, ஜனநாயகம் மீது விழுந்த கறை. இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பதற்கு கடுமையான சட்டம் கொண்டு வர இதுவே நல்ல தருணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.