மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைப்பதில், சிவசேனா உறுதியாக உள்ளது. தேசியவாத காங்கிரசோடு இணைந்து சிவசேனாவை ஆதரிக்க, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.இதனை நேற்று மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரசுடனான ஆலோசனைக்குப் பின், மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


இதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, அவரது மகன் ஆதித்யா தாக்ரே, அக்கட்சி எம்.பி சஞ்சய் ராவத் ஆகியோர், தெற்கு மும்பையில் உள்ள "சில்வர் ஓக்" இல்லத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினர். அப்போது, கூட்டணி ஆட்சி, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி, எக்கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி, எந்தெந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் பதவி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நள்ளிரவு ஆலோசனை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.


இந்த சூழ்நிலையில், இந்நிலையில், மகாராஷ்டிராவில் அமைய உள்ள புதிய ஆட்சியில், 5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக  இருப்பார் என சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்கும்  சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார். சுழற்சி முறையில் முதல்வர் பதவி இருக்காது எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு, இறுதி ஆலோசனையில் ஈடுபடும் 3 கட்சிகளின் தலைவர்கள், கூட்டத்திற்கு பின் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், கூட்டணி மற்றும் புதிய ஆட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.