ரபேல் போர் ஜெட் ஒப்பந்தங்களின் விலை மற்றும் பிற விவரங்களை, அடுத்த 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் வைத்து மத்திய அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரபேல் உடன்படிக்கை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விவரங்களை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என்றும், பொதுமக்களுக்கு வழங்க முடியாத எந்த முக்கியமான தகவலையும் இந்த தகவல்களில் வெளிப்படுத்த வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.



பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். 


இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி ரபேல் ஒப்பந்தம் எப்போது போடப்பட்டது? விதிமுறைகள் என்ன என்ற விபரங்கள் அடங்கிய அறிக்கையை சீலிடப்பட்ட 3 உறைகளில் கடந்த அக்டோபர் 21-ஆம் நாள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 


சமர்பிக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் ஜெட் ஒப்பந்தங்களின் விலை மற்றும் பிற விவரங்களை 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமாய் உத்தரவிட்டுள்ளது!