பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ஜெ.பேபி படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வர முடியும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அட்டகத்தி தினேஷ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகராக ஜெயிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் திரைத்துறைக்குள் நுழைந்தவர் தினேஷ். ஆரம்பத்தில் பாலுமகேந்திராவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு நின்றார். அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போக, அங்கிருந்த அப்போதைய உதவி இயக்குநர் வெற்றிமாறனின் ஆலோசனைப்படி கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றார். ஈ, ஆடுகளம், மௌனகுரு உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.


அதற்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் நாயகன் ஆனார். ராஜூமுருகன் இயக்கத்தில் குக்கூ, கார்த்திக் ராஜு இயக்கத்தில் திருடன் போலீஸ், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் தினேஷ் நடித்தார். அப்படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ் நடித்த விசாரணை படம் மிகப்பெரிய அதிர்வலைகளை எழுப்பியது. 


போலீஸாரின் ஒவ்வொரு அடியிலும் அதிர்ந்து அடங்கிய அவரது உடல்மொழி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் முன்னணி நாயகனாகத் தொடர்ந்து ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சின்ன பட்ஜெட் படங்களின் நம்பிக்கைக்குரிய நாயகனாக தினேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒருநாள் கூத்து படம் விமர்சன அளவில் பாராட்டப்பட்டது. கபாலி படத்தில் ரஜினியுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்தடுத்து வந்த படங்கள் சரியாகப் போகாததால் தினேஷ் கதைப் படங்கள் பக்கம் திரும்பினார். பா.இரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் நடித்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 



மேலும் படிக்க | ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்!


தற்போது மீண்டும் இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் ஜெ. பேபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஊர்வசி, மாறன் உள்ளிட்ட பலர் தினேஷுடன் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு, பா.இரஞ்சித்திடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுரேஷ் மாரி என்பது குறிப்பிடத்தக்கது. 


நகைச்சுவையுடன் கூடிய உணர்வுபூர்வமான குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படம் பா.இரஞ்சித் தயாரிக்கும் ஐந்தாவது படம். ஏற்கெனவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் படங்களை பா.இரஞ்சித் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அட்டகத்தி படத்திலிருந்து எடுத்துக்கொண்டால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பா.இரஞ்சித் - தினேஷ் நட்புக் கூட்டணி அமைத்து திரைத்துறையில் இயங்கி வருவது கவனிக்கத்தக்கது. இதனால் ஜெ.பேபி படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வர முடியும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அட்டகத்தி தினேஷ். 


மேலும் படிக்க | கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷைப் புகழ்ந்து தள்ளிய தங்கர் பச்சான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G