சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளில் உள்ள 18 -44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:


கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.


தற்பொழுது, அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளும் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் இதற்காக அமைக்கப்படவுள்ள தடுப்பூசி (Corona Vaccine) சிறப்பு முகாம்களில் கோவிட் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட உள்ளது.


அதன்படி நாள்தோறும் செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்துறை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அனைத்து அரசு பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


பள்ளி, கல்லூரி ஆசியர்கள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பணியாளர்கள் ஆகியோரும், கொரோனா பாதிப்பு மிக அதிக உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சேவை புரியும் தன்னார்வலர்கள் ஆகியோரும் முன்னுரிமை அடிப்படையில் தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசிகளை பெற்று பயனடையலாம்.


மேலே குறிப்பிட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களின் சார்பில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் அல்லது மாநகராட்சி தலைமையிடத்தில் வருமானம் மற்றும் நிதித்துறை துணை ஆணையர் அவர்களின் அலுவலகத்தில் அணுகி விவரங்களை வழங்கலாம். அல்லது மாநகராட்சியின் https://forms.gle/Bb5VGvRxUXuvmEvi8 என்ற இணையதள இணைப்பின் வாயிலாக அல்லது 94983 46494 என்ற WhatsAPP எண்ணில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்யலாம்.  அவ்வாறு தகவல் அளிப்பவர்களுக்கும், பதிவு செய்வபவர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும்.


பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வரும் நபர்களுக்கு ஊரடங்கு காலத்தில், தடுப்பூசி முகாம்களுக்கு செல்ல, மாநகராட்சியின் தடையில்லா சான்று வழங்கப்படும் மேலும், நிறுவனங்களின் அங்கீகார அட்டை மற்றும் நிறுவன சீருடை அணிந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


ALSO READ |  தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு: 404 பேர் உயிர் இழப்பு!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR