தமிழகத்தில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. 


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில முறை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 8 செ.மீ மழையும் காவிரிப்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.