ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்திற்கு 6 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டு, 74 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 


ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.


ஆனால் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் இதயம் திடீரென்று செயல் இழந்ததாகவும், இதனால் அவர் மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.


ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் விசாரணை கமிஷம் அமைக்க காலதாமதம் ஏற்பட்டு வந்தது.


இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.


இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசாணை வெளியிட்டது. மேலும், இந்த விசாரணை கமிஷனின் விசாரணை, மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.


இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் பணி நிறைவு பெறாததால் விசாரணைக்கான கால அவகாசத்தினை மேலும் 6 மாத காலங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே வரும் ஜூன் 25 வரை இந்த விசாரணை ஆணையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!