கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-செல்வி தம்பதியரின் 17 வயது மகள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி அதிகாலை நேரத்தில், மாணவி அவர் தங்கி இருந்த விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. இதுபற்றிய தகவல் அறிந்து சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதற்கிடையில் மாணவியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதாக கூறி, மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் குற்றம் சாட்டினார். அதன்பின்னர், மாணவியின் உறவினர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி பள்ளி வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் காவலர்களை நோக்கி கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். கட்டுக்கடங்காத கலவரத்தால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர  போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.



கலவரத்தில் விழுப்புரம் சரக டிஜஜி பாண்டியன் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செய்தியாளர்கள் கலவரப் பகுதிக்கு செல்லமுடியாத சூழல் நிலவிவருகிறது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகின்றது. கலவரம் காரணமாக சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்து பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர, 200க்கும் அதிகமான போலீசார், சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் படிக்க | தற்கொலையா நரபலியா?... கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடுக் திருப்பங்கள்


டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை 



இந்நிலையில், பொதுமக்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாணவி உயிரிழந்த வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும், பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று கூறிய டிஜிபி சைலேந்திரபாபு, போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று டிஜிபி கோரிக்கை விடுத்துள்ளார். 


மாணவி தரப்பு வழக்கறிஞர்


இந்நிலையில் தற்போது நடந்து வரும் போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர். போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | அசாமை மிரட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - 4 ஆண்டுகளில் 1,016 பேர் பலி !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ