பாமக நிறுவன தலைவர் ராமதாசு உடன் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதர் பிரகலாத் மோடி சந்திப்பு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசு அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இளைய சகோதரரும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவருமான பிரகலாத் மோடி அவர்களை சந்தித்துப் பேசினார்.  இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பிரகலாத் மோடி அவர்களை ராமதாசு அவர்களும், பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி இராமதாசு அவர்களும் வரவேற்றனர். 


தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ராமதாசு அவர்களும், பிரகலாத் மோடி அவர்களும் விவாதித்தனர். தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சமூக நீதிக்காக ராமதாசு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தச் சந்திப்பின் போது, பிரகலாத் மோடி அவர்கள் நினைவு கூர்ந்தார். 


பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை ராமதாசு அவர்களிடம் பிரகலாத் மோடி அவர்கள் வழங்கினார். மருத்துவர் அய்யா அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரகலாத் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.