தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.19 TMC காவிரி நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு தமிழகம் அரசு வலியுறுத்தல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரிநீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுவை மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 4 மாநில பிரதிநிதிகளும் காவிரி நீர் தொடர்பான புள்ளி விபரங்களை சமர்ப்பித்தனர். காவிரி நீரின் ஜூன் மாதத் தவணையான 9 புள்ளி 19 டிஎம்சி நீரை உடனே திறந்து விட கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும் என்று தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் குமார், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 8வது கூட்டம் சுமூகமாக நடந்ததாகக் கூறினார். 2018-19 ஆம் ஆண்டுக்கான பருவகால, நீர் கணக்குகள் தயாரிப்புக்கான பணிகள் குறித்து இறுதி செய்ய முடிந்ததாகக் கூறிய அவர், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 9வது கூட்டம் நடப்பு மாதம் 3வது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக கடந்த மாதம் 23 ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்திலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி நடந்த காவிரிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் போது, காவிரியில் ஜூன் மாதத்திற்கான தவணை நீரான 9 புள்ளி 19 டிஎம்சி நீரை உடனே திறந்து விடவும் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் தங்கள் மாநில அணைகளில் நீர் குறைவாக இருப்பதாகக் கூறிய கர்நாடகம் தண்ணீர் தர மறுத்துவருகிறது.