மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என் பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தொடர்ந்து 24-வது நாளாக அவர்கள் போராடிவருகின்றனர். மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்காமல் முக்காடு போட்டதால் நாங்கள் இன்று முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில், நேற்றைய போராட்டத்தின்போது, அய்யாக்கண்ணு மற்றும்  பழனிசாமி இருவரும் திடீர் என மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் போராட்டக் களத்துக்குத் இருவரும் திரும்பினார்கள்.


இன்று தமிழக விவசாயிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தினார். 


பிறகு அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-


எங்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினோம். அவர் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்காக நிச்சயம் விவசாயிகளின் கஷ்டங்கள் குறித்து எடுத்துரைப்பேன் என்று தெரிவித்தார்.


பிரதமர் எங்களை எப்படியும் சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இல்லையென்றால் இங்கேயே சமாதி ஆகிவிடுவோம் என அவர் கூறினார்.