சென்னை: ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 11 எம்.எல்.ஏக்கள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், தனது பரிசீலனையில் உள்ள விவகாரங்களை சட்டசபையில் பேச முடியாது. மேலும் அவர்கள் மீது விதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விளக்கம் அளித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, கடந்த பிப்ரவரி 18, 2017 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக கொறடா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.


உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பல முறை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை உச்ச நீதிமன்றம் முடிந்து வைத்துள்ளது.


அதாவது 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை கடந்த 14 ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், தகுதிநீக்கம் செய்யப்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில், இந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.