தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (3.6.2020) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக சென்னை மாநகரில் கிருமி நாசினி தெளித்திட 25 இருசக்கர வாகனங்களின் சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 இருசக்கர வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

RAAD | கடலோர பகுதியில் மீனவர்கள் வரும் ஜூன் 4, வரை கடலுக்கு செல்ல தடை...


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழகமெங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரில் மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகள், பேருந்து நிலையங்கள் என சுமார் 45,000 இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளதால், அச்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 1 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் தெளிப்பான்கள் வாங்கப்பட்டன.


இந்த இருசக்கர வாகனங்களில் காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு மணிநேரத்தில் 1,620 லிட்டர் கிருமி நாசினியை தெளிக்க இயலும். சென்னை-யில் கொரோனா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) இவ்வாகனங்கள் பயன்படுத்தப்படும். கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடிவுற்ற பிறகு, இவ்வாகனங்கள் சென்னை-யின் குறுகிய சாலைகளில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.


READ | ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் -இராமதாசு!


இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் து.மு. திரிபாதி, இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் சி. சைலேந்திர பாபு, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.