கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்பே வடிவமான இயேசு பிரான் அவதரித்த நன் நாளை கிறிஸ்துமஸ் திருநாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த வரும், உலக மக்களுக்கு அன்பின் புனிதத்தை உணர்த்தியவருமான இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், கிறிஸ்துவப் பெருமக்கள் தங்கள் வீடுகளில் வண்ண மின் விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, வீட்டு வாசலில் மின் நட்சத்திரங்களை கட்டி, அதிகாலையில் குளித்து, புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் அறுசுவை விருந்துண்டு, கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்கள்.


கிறிஸ்துவ மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட புரட்சித் தலைவி அம்மா, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி சீரிய முறையில் செயல்படுத்தினார்கள். புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தொடர்ந்து இத்திட்டத்தினை செவ்வனே செயல்படுத்தியுள்ள தன் விளைவாக, இதுவரை 2800 கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.


இயேசு பிரான் போதித்த தியாகம், மன்னிப்பு, அன்பு, சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இவ்வாறு அதில் கூறியுள்ளார்.