தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் கௌதம் (24) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(21) என்பவருக்கும் கடந்த நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 28 நாட்களே ஆன நிலையில் புவனேஸ்வரி கடந்த 8ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்த தகவல் அறிந்து வந்த கம்பம் வடக்கு காவல் துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதற்கிடையே கடந்த 2ம் தேதி கௌதம் மற்றும் புவனேஸ்வரி இருவரும் கூடலூர் தொட்டி பாலம் பகுதியில் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றிருந்தபோது அங்கு அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் கௌதம் மீது காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அங்கிருந்து தப்பித்து வந்து கௌதம் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


ALSO READ | பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்


இந்தப் புகாரை அடிப்படையாகக்கொண்டு கூடலூர் தெற்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து கூடலூர் தெற்கு காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது கௌதம் என்பவரை காரை ஏற்றி கொலை முயற்சி சம்பவத்திற்கும் புவனேஸ்வரிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 


புவனேஸ்வரிக்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது தீராத பற்று இருந்து உள்ளது. இதன் அடிப்படையில் புவனேஸ்வரி தடகள போட்டிகளில் பல்வேறு வெற்றி பெற்று சாதனைகள் புரிய வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்ததாகவும், அதற்காக கூடலூர் பகுதியில் உள்ள பயிற்சி பள்ளி ஒன்றில் புவனேஸ்வரி பயிற்சிக்காக சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.


ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி 


விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்று புவனேஸ்வரி எண்ணிய தாகவும் ஆனால் அதற்குள்ளாக அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து திருமணம் முடித்து விட்டதால் அந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் தெரியவருகிறது. 


இதனை அடுத்து கணவன் கௌதம் உடன் வாழ விரும்பாததால் கூடலூர் பகுதியில் விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் பழக்கமான நிரஞ்சன் ராஜா(20), என்பவரிடம் தான் பணம் தருவதாகவும் தனது கணவரை கொலை செய்யுமாறும் புவனேஸ்வரி கூறியுள்ளார். 


இதனை அடுத்து நிரஞ்சன் ராஜாவிற்கு புவனேஸ்வரி பணம் கொடுத்ததாகவும் அந்த பணத்தை கொண்டு நிரஞ்சன் கேரள பதிவெண் கொண்ட பழைய கார் ஒன்றை வாங்கி தனது கூட்டாளிகள் பிரதீப், மனோஜ்குமார், மற்றும் இருவரை கூட்டு சேர்த்து கொண்டு கடந்த டிசம்பர் 2 தேதி கூடலூர் தொட்டி பாலம் பகுதியில் காருடன் கௌதம்  வருவதற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும்,  புவனேஸ்வரி தனது கணவன் கௌதமை அழைத்துக்கொண்டு அந்த பகுதிக்கு சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


அங்கு கௌதமை இருசக்கர வாகனத்தை ஓட்டி வருமாறு கூறிவிட்டு புவனேஸ்வரி சாலையோரத்தில் செல்போனில் பேசியபடி சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த நபர்கள் காரை கொண்டு கௌதம் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். ஆனால் சுதாகரித்துக் கொண்ட கௌதம் அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது காரில் இருந்து இறங்கி வந்து கௌதமை தாக்கி உள்ளதாகவும், பின்னர் ஆட்கள் வரும் சத்தம் கேட்டது நிரஞ்சன் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். 


இந்த வழக்கு விசாரணையில் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் மாட்டிக்கொண்டனர். இந்தக் கொலை முயற்சி சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை நெருங்கியதால் தனது திட்டம் வெளியே தெரிந்து விட்டது என நினைத்து புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணையில் ஐந்து பேரையும் கூடலூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR