Religion vs Priest: அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதால் மதம் வளருமா? மதம் பிடிக்குமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் ஏன் 51 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உரிமை கொடுப்பது இந்து மதத்தை வளர்க்குமா? என்ற கேள்விக்கான தேடல்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 17, 2021, 05:04 PM IST
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் 51 ஆண்டுகளுக்கு முன் உருவானது
  • திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட சட்டம்...
  • அனைத்து சாதியினரு2ம் அர்ச்சகராவதால் மதம் வளருமா?
Religion vs Priest: அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதால் மதம் வளருமா? மதம் பிடிக்குமா? title=

புதுடெல்லி: தமிழகத்தில் 51 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுதான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம். 1970ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், அரை நூற்றாண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் தமிழக வரலாற்றிலே முதன் முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த சட்டம் ஏன் இத்தனை ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை என்ற கேள்விகளும், இது தொடர்பான சர்ச்சைகளும் ஒரு புறம் இருக்கட்டும்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உரிமை கொடுப்பது இந்து மதத்தை வளர்க்குமா? என்ற கேள்விக்கான தேடல் இது.

இறுக்கத்தைத் தொடர்ந்து தளர்த்திக் கொண்டே வரும் மதங்கள் நவீன உலகில் நிலைத்து நிற்கின்றன. சமூக நீதியை நிலை நிறுத்துவது, மனித உரிமைகளில் மதம் குறுக்கிட்டுக் கொண்டு இருப்பதை முடிவுக்கு கொண்டு வருவது என்பவை உட்பட பல தடைகளை தகர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. 

Also Read | அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம். பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

ஒரு காலத்தில் இருந்த நடைமுறைகளை இன்று கேட்டால், இந்த தலைமுறையினருக்கு அது நம்பவே முடியாத அதிர்ச்சியாக இருக்கும். உடன்கட்டை ஏறுதல் என்ற சதி, தலித் மற்றும் தாழ்ந்த சாதியினருக்கு ஆலயங்களுக்கு செல்ல அனுமதி இல்லை, கைம்பெண்களின் கையறு நிலை, அவர்களின் சமூக நிலை என மதங்களில் இருந்த பல புரையோடிய புண்களை சரி செய்ததும் சட்டங்கள் தான்.

இது தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், மத நம்பிக்கைக்குள்ளே அரசு தலையிடக் கூடாது என்ற வாதங்களும், பல சர்சசைகளும் எழுந்தன. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் தான் மாபெரும் சமூகப் புரட்சிகளுக்கு அடித்தளமாய் அமைந்தன. அதேபோல, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதன் அடிப்படை நோக்கம் சமூக நீதிதான், மதத்தை வளர்ப்பது அல்ல. 

ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதால் மதம் வலுப்பெறலாம் என்பது சரித்திரம். அதற்கு உதாரணம் கிறித்துவர்களின் புனிதநூலான பைபிள். ஒரு காலத்தில்  பைபிள் அனைவரும் அணுகக்கூடியதாக இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 14ம் நூற்றாண்டில் பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜான் வைக்ளிஃப் கடவுள் விரோதியாக அறிவிக்கப்பட்டார். 

Also Read | Women Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு

ஆனால் காலம் தன்னைத்தானே புனரமைத்துக் கொள்கிறது. புராடஸ்டன்ட் சீர்திருத்தம் வந்த பொழுது போப், பிஷப் என சிறு குழுக்களின் கையில் இருந்த பைபிள் அனைவருக்கும் கிடைத்தபோது கத்தோலிக்கர்களால் அது மதவிரோத செயலாகப் பார்க்கப்பட்டது. இன்று பைபிளின் நிலை என்ன?

உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் மற்றும் அதிக அளவில் விற்பனையான புத்தகம் என்ற கின்னஸ் ரெக்கார்ட்டை வைத்திருப்பது பைபிள். புனித பைபிளை தாங்களும் இனி படிக்கலாம் என்பதற்காகவே பெரும்பாலான மக்கள் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர் என்பதும் வரலாற்றின் பொன்னேடுகளில் இடம்பெற்ற உண்மை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மாற்றம் பரவலானால், அது, இந்து மதத்தை பொது மக்களிடையே நெருக்கமாகப் கொண்டு போகவே உதவும். 

ஆகம விதிப்படி இயங்கும் ஆலயங்களைத் தவிர, பல கோவில்களில் பிற சாதியினரும் அர்ச்சகராக இருக்கிறார்கள். ஆனால், அவை சிறிய ஆலயங்கள். அர்ச்சகராவதற்கு சாதி தடையில்லை என்ற நிலை வரும்போது, பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நம்பிக்கை அதிகரிக்கிறது.

Also Read | மதுரை ஆதீனம் மற்றும் ஸ்டான் சுவாமிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்.!!

ஒரு தலித் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்போதும், குடியரசுத் தலைவராகும்போதும், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. அதேபோல தான் உயர் சாதியினரைத் தவிர பிற சாதியினரும் அர்ச்சகராகும் போது பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆனால், இப்போது அர்ச்சகராகும் பலர் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்.  ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது அவசியமான மாற்றம் தான்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மதங்களில் ஏற்பட்ட மாறுதல்களும் சீர்திருத்தங்களும் சம்பந்தப்பட்ட மதங்களை வளப்படுத்தவே உதவியிருக்கின்றன. கடும்போக்கு மதங்களே, பிறருக்கு அச்சத்தை ஊட்டுகின்றன.

அதற்கு அண்மை உதாரணம் இஸ்லாமிய மதம். கடும்போக்கு தாலிபன்கள், ஒரு இஸ்லாமிய நாடான ஆஃப்கானிஸ்தானில் செய்யும் கொடூரங்களும், கொடுமைகளும் பிற மதத்தினர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

Also Read | Afghanistan: இரக்கமற்ற தாலிபான்களின் கொடூரத்திற்கு சாட்சியமளிக்கும் பெண் பிரபலங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News