‘நீயா நானா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான இளைஞர் மரணம்!

Neeya Naana Pranav Death : கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி மூலம், சில நாட்களுக்கு முன்பு பிரபலமான இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2024, 01:57 PM IST
  • நீயா நானா மூலம் பிரபலமான வாலிபர்
  • ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு
  • 25 தோசை சாப்பிட்டு பிரபலமானவர்
‘நீயா நானா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான இளைஞர் மரணம்!  title=

Neeya Naana Pranav Death : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக இருப்பது, நீயா-நானா நிகழ்ச்சிதான். இதனை பிரபல டிவி பிரபலம் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தாெடர்ந்து தளபதி நடிகரின் பெயர் கொண்ட சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் மதியம் வேளையில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, சுமார் 23 சீசன்களை கடந்துள்ளது.  இதில், ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதற்கு எதிராக ஒரு தரப்பினரும் ஆதரவாகவும் ஒரு தரப்பினரும் பேசுவர். அப்படி எடுக்கப்படும் தலைப்புகளில் பேசுபவர்கள் வைரலாவதுண்டு. அப்படி, சில வாரங்களுக்கு முன்னர் ஒரு சுவாரஸ்யமான தலைப்பின் மூலம் பிரபலமான இளைஞர், தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

25 தோசை வாலிபர்..

ஒரு மாதத்திற்கு முன்னர், “தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு Vs தோசை சாதாரண உணவு” என்ற தலைப்பில் நீயா நானா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஒரு தாய் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு எனும் பக்கத்திலும், சாதாரண உணவு எனும் பக்கத்தில் மகளும் கலந்து கொண்டனர். விவாதம் நடக்கையில், அந்த மகள் தன் அண்ணனுக்கு அம்மா, 25 தோசை கூட போட்டு தருவார் என்று கூறினார். உடனே அவர் அம்மாவிடம் மைக் கொடுக்கப்பட்டது. அப்போது அவர், தன் மகன் பிரணவ், தான் சாப்பிடும் தோசைக்கு என்னென்ன தொட்டு சாப்பிடுவார் என்றும் அவர் சாப்பிடுவதை கணக்கு பார்க்க கூடாது என்றும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ந்து போன கோபிநாத், “யாருய்யா அவன், எனக்கே பார்க்கனும் போல இருக்கே..” என்று கூறினார். இந்த நிகழ்ச்சி வைரலானதை அடுத்து, பிரணவ்வையும அவரது தாயாரையும் சில யூடியூப் ஊடகங்கள் அவர்களின் இல்லத்திற்கே சென்று பேட்டி எடுத்தன. அதில் அந்த இளைஞனுக்கு 22 வயது ஆகிறது என்பதும், அவர் உண்மையாகவே 25 தோசை சாப்பிடுவார் என்றும் தெரிய வந்தது. 

இது குறித்து அவர் கொடுத்திருந்த நேர்காணலில், உண்மையாகவே 25 தோசையை தேன், பொடி, மேகி மசாலா ஆகியவற்றை போட்டு சாப்பிட்டு காண்பித்தார். 

மேலும் படிக்க | புஷ்பா இஸ் பேக்... அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் டீசர் வெளியீடு

ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு..

இப்படி, கடந்த சில நாட்களாக ட்ரெண்டான இந்த வாலிபர், கடந்த புதன்கிழமை அன்று குரோம்பேட் ரயில் நிலையத்தில் இரவு 10:30 மணியளவில் தனது நண்பருடன் சேர்ந்து தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது வேகமாக வந்த தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்திருக்கிறார். செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், அவருடன் இருந்த நண்பர் சதீஷும் உயிரிழந்திருக்கிறார்.

இந்த சம்பவம், பிரணவ்வின் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, அந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கும், பிரணவ்வின் சேட்டைகளை நேர்காணலில் பார்த்து ரசித்தவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

Lawrence Solvadhellam Unmai

இதே போல, ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் மீம் டெம்ப்ளேட்டாக மாறிய லாரன்ஸும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படி சமூக வலைதளங்களில் வைரலாகி இருப்பவர்கள் உயிரிழந்து போவது அவர்களை வீடியாேவில் பார்த்து சிரிப்பவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தது ‘இந்த’ முன்னணி ஹீரோதான்! அவர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News