பான் இந்தியா படம் என்பது பைத்தியக்காரத்தனம் - அமீர் அதிரடி

பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்தான் என இயக்குநர் அமீர் பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 14, 2022, 04:35 PM IST
  • அமீர் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்திருக்கிறார்
  • சுரேஷ் காமாட்சி படத்தை வெளியிடுகிறார்
  • படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்
 பான் இந்தியா படம் என்பது பைத்தியக்காரத்தனம் - அமீர் அதிரடி title=

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.   இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். 

படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்தச் சூழலில் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து 20 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவரை கௌரவிக்கும் விதமாக படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமீர் பேசுகையில், “தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனைதான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் என்னிடம் பேசாமல் இருந்தார். 

நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை வெளியிடுகிறார் என்றதும் எனது படத்திற்காக வைத்திருந்த உயிர் தமிழுக்கு என்கிற டைட்டில் இதற்கு பொருத்தமாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டேன். இந்த சமயத்தில் இது சரியான ஒரு டைட்டில்.

Ameer

ஆனந்த்ராஜ வில்லனாக நடித்து பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தில் அவருக்கு அப்படி சில காட்சிகள் இருக்கின்றன. சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி போல எனக்கும் இமான் அண்ணாச்சிக்குமான கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இது வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் இருந்து இந்த கூட்டணி தொடரும். இளையராஜாவுக்கு பிறகு, நான் வியந்து பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்திற்காக மெனக்கெட்டதை மறக்க முடியாது. படத்தில் எம்ஜிஆர் பாடல் உள்ளிட்ட நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்னையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டே இருக்கணும். 

Ameer

நான் எப்போதும் கதையின் நாயகனாகதான் இருப்பேன். சினிமா என்பது இயக்குநரின் மீடியம், நாயகர்களால்தான் சினிமா என்கிற பிம்பத்தை  உடைக்க விரும்புகிறேன் அதேசமயம் ஒரு ரசிகனாக நடிகர்களை கொண்டாடுவோம். உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை.

பான் இந்தியா என்கிற கலாசாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்துக்காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே  போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்தான்.

மேலும் படிக்க | ரசிகர்களுடன் தொடர் சந்திப்பில் விஜய்... துணிவுக்கு அஞ்சிய வாரிசு?

விரைவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நான் ஒரு படம் இயக்க உள்ளேன். ஏற்கனவே இறைவன் மிகப் பெரியவன் மற்றும் இன்னொரு படம் கைவசம் இருக்கிறது. அதை முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குவேன்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News