கண்டித்த ஆளுநர் ஆர்.என். ரவி - நாகா மக்களை இழிவுப்படுத்தினாரா ஆர்.எஸ். பாரதி?

Governor RN Ravi - RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் பின்னணியை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 5, 2023, 08:00 PM IST
  • நாகா இன மக்களை ஆர்.எஸ். பாரதி இழிவுப்படுத்தியதாக ஆளுநர் கண்டனம்.
  • ஆர்.எஸ். பாரதியின் வீடியோவையும் ஆளுநர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  • இது தமிழ்நாடு அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டித்த ஆளுநர் ஆர்.என். ரவி - நாகா மக்களை இழிவுப்படுத்தினாரா ஆர்.எஸ். பாரதி? title=

Governor RN Ravi - RS Bharathi: தமிழ்நாடு அரசியலில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுக அரசுக்குமான முரண் என்பது ஒரு தொடர் கதையாக வருகிறது. ஆளுநர் ரவியின் கருத்துக்கு முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் என பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. தமிழ்நாடு அரசின் பல்வேறு மசோதாக்களை கையெழுத்திடாமல் தேக்கி வைத்திருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

சமீபத்தில், விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு மதுரை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்பட்டது. இதனால், மதுரை பல்கலைக்கழக்கத்தின் பட்டமளிப்பு விழாவை துணை வேந்தர் என்ற முறையில் அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்தார். 

அதற்கு முன், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து பல முரண்பட்ட கருத்துகள் வந்ததாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நாளாக நாளாக திமுக அரசு - ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான பிரச்னை வளர்ந்துகொண்டு வருவதாகவே தெரிகிறது. குறிப்பாக, ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு வரும் நவ. 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | இந்தியாவுக்கே வழிகாட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி!

இந்த நிலையில், தற்போது புது பிரச்னை கிளம்பி உள்ளது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி,"நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி 'நாய் கறி உண்பவர்கள்' என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தற்போது தமிழ்நாடு அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு தனிப்பட்ட விழாவில் ஆர்.எஸ். பாரதி பேசிய அந்த பேச்சின் வீடியோவையும் ஆளுநர் வெளியிட்டுள்ளார். அதில், இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என இந்த ஆளுநர் செயல்படுகிறார் என்றும் வேண்டுமென்ற வம்பு சண்டைக்கு இழுக்கிறார் என பேசினார். தொடர்ந்து, அரசு அனுப்பும் மசோதாக்களை கையெழுத்து போட மாட்டேன் என்கிறார் என்றார். 

தொடர்ந்து ஆர்எஸ் பாரதி, நாகாலாந்தில் இவரை (ஆர்.என். ரவி) ஊரைவிட்டே விரட்டி அடித்தார்கள் என்றார். மேலும், அவர் பேசுகையில்,"நான் பேசுவதை தவறாக எண்ண வேண்டாம், ஒரு உதாரணத்திற்கு கூறுகிறேன். நாகாலாந்து மக்கள் நாய் கறி தின்பவர்கள். நாய் கறி தின்பவர்களுக்கே அப்படி என்றால் சுரணை இருந்து இந்த கவர்னரை ஓட ஓட விரட்டினான் என்றால், உப்பு போட்டு உண்ணும் இந்த தமிழர்களுக்கு எவ்வளவு சுரணை இருக்கும்" என்றார். ஆர்.எஸ். பாரதி பேசிய அந்த பேச்சு முழுமையாக இல்லை, அதன் 1 நிமிடம் 13 வினாடிகள் உள்ள பகுதி மட்டுமே ஆளுநர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவர் எங்கு பேசினார் என்றும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.   

மேலும் படிக்க | பெண்களை ரோட்டில் அரைகுறையாக ஆட வைப்பது தான் Happy Street ah? நடிகர் ரஞ்சித்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News