கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு : மரண தண்டனை ஆயுளாக குறைப்பு!

கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருது பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 8, 2022, 03:41 PM IST
  • தமிழகத்தை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு
  • மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
  • சகோதரரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு : மரண தண்டனை ஆயுளாக குறைப்பு! title=

காதல் ஜோடி ஆணவக்கொலை:

கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் - கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரையும் புதுக்கூரைப்பேட்டை முந்திரித்தோப்பிற்கு கொண்டு சென்று வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து ஆணவக் கொலை செய்து பின்னர் உடல்களை யாருக்கும் தெரியாமல் எரித்துள்ளனர்.

இதுகுறித்து, விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்த நிலையில், கடந்த 2004 ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி  உத்தரவிட்டது.

இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், உறவினர்கள் ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சகோதரருக்கு தூக்கு தண்டனை:

இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கண்ணகியின் தந்தை துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து 2021 செப்டம்பர் 24 ம் தேதி  தீர்ப்பளித்தது. இரண்டு பேரை விடுதலை செய்தது.

இந்நிலையில் மரண தண்டனையை உறுதிபடுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு  அனுப்பியது. அதேபோல  தண்டனையை ரத்து செய்ய கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | ONE SIDE LOVE : லவ் சொல்ல மறுத்த இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற சைக்கோ!

மேல்முறையீட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு:

இந்த மேல்முறையீடு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விவகாரம் முதலில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காக பதியப்பட்டது. சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை, குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பொறுந்தாது  என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சிபிஐ தரப்பிலும் முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும் இந்த கொலை சம்பவத்திற்கு தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும் இது ஆணவ கொலைதான் என்பதால் கடலூர் நீதிமன்ற  தீர்ப்பை உறுதி செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

மரண தண்டனை ஆயுளாக குறைப்பு:

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உத்தரவிட்டனர். அதேசமயம், கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

மேலும், அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மாறனின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News