புதுடில்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) நாட்டின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இந்தியாவுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். மோரிசன் தனது செய்தியில், இந்தியாவுடனான நட்பை விவரிக்க இந்தி சொற்களைப் பயன்படுத்தினார். நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவையுடன் ஜனநாயகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு மற்றும் நட்பு ஆகியவற்றால் இரு நாடுகளுக்கு இடையிலான இணைப்பு அடையாளம் காணப்படுகிறது என்றார் மோரிசன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழ்ந்த நட்பு வர்த்தகம் மற்றும் அரசியல் செயலுத்தியைத் தாண்டி ஆழமானது. பரோசா (நம்பிக்கை) மற்றும் சம்மான் (மரியாதை) ஆகியவற்றால் இது நிறுவப்பட்டது – இந்த நட்பின் ஆழம் தோழமை, ஜனநாயகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் அதிகரிக்கிறது” என்று ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் இரு நாடுகளின் உறவுகளைப் பாராட்டினார். "இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக, ஆஸ்திரேலியா அதன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் முழு மனதுடன் இணைகிறது. இந்திய மக்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.


ஆஸ்திரேலிய (Australia) பிரதமர், "எங்கள் நாட்டில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் மிக அதிக அளவில் உள்ளனர். அவர்களின் இருப்பு ஆஸ்திரேலியா பூமியில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார நாடாக மாற உதவியது" என்றும் தெரிவித்தார்.  "நமது பகிரப்பட்ட மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் குறிக்கோள்களின் காரணமாகவே, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு இருதரப்பு உறவுகளை வரலாற்று ரீதியாக உயர்த்துவதாக நானும் பிரதமர் மோடியும் அறிவித்தோம்" என்று மோரிசன் இந்தியாவுக்கான தனது செய்தியில் தெளிவு படுத்தினார்.


"நம் இரு நாடுகளின் கூட்டாண்மை இந்த பிராந்தியத்தின் மற்றும் உலகளாவிய சமூகத்தின் பொதுவான நன்மைக்கு உதவுகிறது. மேலும் COVID-19 தொற்றுநோயின் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை சமாளிக்க நாம் இணைந்து பணியாற்றுவது மிக முக்கியமானதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.


கொரோனா வைரசால் (Corona Virus) ஏற்பட்ட லாக்டௌன் காரணமாக ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசனின் இந்தியாவுக்கான பயணம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடி  (Narendra Modi) ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுடன் மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.