புதுடெல்லி: டெல்லி (Delhi) முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஆட்சிக் காலத்தில் செய்த பணிகளின் அடிப்படையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) போட்டியிடும் என்று இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தத் தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மற்றும் இனி செய்யப்படும் பணிகளின் அடிப்படையில் அமையும்" என்று ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் (Delhi Assembly Election) பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 11 அன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம் ஆத்மி கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லியில் செய்த பணிகளுக்காக மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் தங்களை தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளது. அதேபோல ஆம் ஆத்மி அமைச்சரவை அமைச்சரும், டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கோபால் ராய், கட்சி தனது பணிகளின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் என்று கூறினார்.


 



கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களை வென்று மிகப்பெரிய பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி (BJP) மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதே நேரத்தில், அந்தத் தேர்தலில் பெரிய கட்சியான காங்கிரஸால் (Congress) தனது தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 


வரவிருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும். அதுமட்டுமில்லாமல் பகுஜன் சமாஜ் கட்சியும் சில இடங்களில் போட்டியிடும். ஏற்கனவே ஆம் ஆத்மி மற்றும் பாஜக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த முறை தேசிய தலைநகரில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது