முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ.பி.எஸ் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் ஜெயலலிதாவை  சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் நான் கூறினேன். அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்தும் இதே கருத்தை வலியுறுத்தினேன். ஆனால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று விஜயகுமார் ரெட்டி நம்பிக்கைத் தெரிவித்தார்.  அதேபோல், அப்போலோ மருத்துவமனையின்  சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் உத்தரவிடவில்லை. சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிப்பதாக கூறித்தான் வந்தார். ஆனால், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ”எனக்கு எதுவுமே தெரியாது” - ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஓபிஎஸ்


இதையடுத்து, இரண்டாவது நாளாக இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை தொடர்கிறது. அதற்காக மீண்டும் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். இன்று அளித்த வாக்குமூலத்தில் அவர், ‘ திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதாதான். இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்குத் தெரியும். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் கூறினார். அதைத்தாண்டி எனக்கு எதுவும் தெரியாது. இந்த விஷயத்தை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். பொதுவெளியில் எங்கும் இதுபற்றிப் பேசவில்லை. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.



ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. டிசம்பர் 04 தேதி அப்போதைய ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததும், ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்ததும் எனக்கு நினைவில்லை. டிசம்பர் மாதம் 04 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது. ஆனால் மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் என்னிடம் தெரிவித்தார். பிறகு, டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா  இறப்பதற்கு முன்பு நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்.’ என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | நான் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை : இளவரசி..!


இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அப்பல்லோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாகவோ கேள்வி எழுப்பக் கூடாது என்று வாதிட்டார். அதுபோன்ற கேள்விகளை முன்வைத்தால் அருகில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனை குறுக்கீடு பதிவாக குறித்துக்கொள்வதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்து, தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணையை நடத்தி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR