கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். 20 வயதான இவர் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் காலை நாயக்கனூர் ஏரி அருகே மர்மமான முறையில் வெங்கடேஷ் சடலமாக கிடந்தார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இறந்து கிடந்த வெங்கடேஷின் உடலில் காயங்கள் தென்பட்டதால் அவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகபட்ட கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி விசாரணையை பல கோணங்களில் தீவிரப்படுத்தினார். இதற்கிடையே, இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து அவரது குடும்பத்தினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 



வெங்கடேஷும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூக பெண்ணும் காதலித்து வந்ததாகவும், இதனால் பெண்ணின் குடும்பத்தினர் திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர். அதனையடுத்து வெங்கடேஷின் மரணம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.



மேலும் படிக்க | சென்னை : பள்ளிக்கரணையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை ..!


தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பிரேத பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்தது. யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்து போனது தெரியவந்தது. 


மேலும் படிக்க | ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!


கூடவே அதற்கான மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டது. சம்பவத்தன்று வெங்கடேஷ் தனது காதலியை பார்ப்பதற்காக நள்ளிரவில் புறப்பட்டு சென்றிருக்கிறார். அப்போது போகும் வழியில் யார் கண்ணிலும் தென்படாமல் இருக்கு விவசாய நிலத்தில் இறங்கியவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியிருக்கிறார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மறுநாள் காலை அதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலத்தின் உரிமையாளர் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வெங்கடேஷின் உடலை நாயக்கனூர் ஏரி அருகே போட்டு விட்டு தலைமறைவானார். இதையடுத்து சிங்காரப்பேட்டை போலீசார், அன்பழகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR