வாஷிங்டன்: கொரோனா வைரஸ் (Corona Virus) காற்றின் ஊலம் பரவக்கூடியதா?  இல்லை என்று ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு (WHO) இதை நேரடியாக மறுத்திருக்கிறது. ஆனால் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கொரோனா காற்றின் மூலமாக பரவுவதாக நம்புகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூயார்க் டைம்ஸ் (New York Times- NYT) அறிக்கையின்படி, கொரோனா வைரஸின் சிறிய துகள்கள் காற்றில் இருப்பதாக நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலக மக்களை பாதிக்கக்கூடிய இந்த விஷயம் தொடர்பான தனது பரிந்துரைகளை WHO மாற்ற வேண்டும் என்று விஞ்ஞானிகள் கோருகின்றனர்.


Also Read | உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு


இருமல் அல்லது தும்மலின் போது பாதிக்கப்பட்ட நபரின் வாய் அல்லது மூக்கிலிருந்து வரும் துளிகள் மற்றொரு நபரை அடையும் போது கொரோனா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது என்று WHO கூறுகிறது. பல நாட்டு விஞ்ஞானிகள் இந்தக் கருத்தில் இருந்து மாறுபடுகின்றனர்.


நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, விஞ்ஞானிகள் WHOக்கு வெளிப்படையாக கடிதம் எழுதியுள்ளனர்.  அந்தக் கடிதம் அடுத்த வாரம் ஒரு அறிவியல் சஞ்சிகையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 


Also Read | கொரோனா தடுப்பு மருந்து குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்ட பகீர் தகவல்..!


32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் காற்றில் உள்ள நோய்க்கிருமியின் நுண்துகள்கள் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்பிற்கு கொடுத்துள்ளனர்.  


பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளியேறும் நீர்த் திவலைகளுடன், பாதிக்கப்பட்டவரின் சுவாசத்தின் போது வெளியேறும் ஒரு சிறு திவலை நீர் கூட அறையில் இருக்கும் காற்றில் பரவி, மற்றொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.   இருப்பினும், வைரஸ் காற்றில் காணப்பட்டதற்கான ஆதாரங்களை நம்ப முடியவில்லை என்று WHO கூறுகிறது.


இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு குழுவின் தொழில்நுட்பத் தலைவர் டாக்டர் பெனடெட்டா அலெக்ரான்ஸி (Benedetta Allegranzi) கூறுகையில், 'கடந்த சில மாதங்களில் கொரொனா நுண்கிருமி காற்றின் மூலமாக பரவுவதற்கான (airborne transmission) சாத்தியங்கள் இருப்பதாக நாங்கள் பலமுறை கூறியுள்ளோம், ஆனால் அதன் உறுதியான அல்லது தெளிவான ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை' என்று கூறுகிறார்.


Also Read | கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்


தற்போது அடுத்த வாரம் கொரோனா காற்று மூலம் பரவுவதாக அறிவிக்க வேண்டும் என 32 நாடுகளின் 239 விஞ்ஞானிகளின் அறிக்கையானது மருத்துவ சஞ்சிகையில் வெளியாகும்போது, சர்ச்சைகள் இன்னும் அதிகமாகும்.


எதுஎப்படியிருந்தாலும் சரி, உலக மக்கள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா பெருந்தொற்று தொடர்பான தகவல்களே இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில் அந்த நோயை கட்டுப்படுத்துவம், கோவிட்-19 நோயை எதிர்த்து வெற்றி கொள்வதும் எவ்வாறு என்று சர்வதேச அளவில் மக்கள் கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.