ஆப்கனில் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் கவர்னர் உட்பட 18 பேர் பலி!

ஆப்கனில் கவர்னர் அலுவலகத்தில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மாவட்ட கவர்னர் உட்பட 18 பேர் பலியாகினர்.

Last Updated : Apr 13, 2018, 09:52 AM IST
ஆப்கனில் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் கவர்னர் உட்பட 18 பேர் பலி! title=

சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கனில் மத்திய பகுதியான காஸ்னி மாகாணம், கவுஜா உமரி மாவட்டத்தில் கவர்னர் அலுவலம் உள்ளது. இந்த அலுவகத்தில் நேற்று காலை மாகாண கவர்னர், புலனாய்வுத்துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது, தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மாகாண கவர்னர், புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி, காவல்துறை துணைத்தலைவர் உட்பட 18 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தை அந்த கவுஜா மாவட்ட சபை உறுப்பினரான மொஹம்மத் ஆரிப் ரஹ்மானி உறுதி செய்துள்ளார். 

ஆனால் மரணமடைந்தவர்கள் யார், எத்தனை பேர் என்ற விபரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Trending News