பேஸ்புக் தகவல் திருட்டு: மார்க் ஜூக்கர்பெர்க்கை எச்சரித்த மத்திய அரசு

தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கடுமையான அதிகாரத்தை நாங்கள் பெற்றுள்ளோம். தேவைப்பட்டால் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இந்தியாவிற்கு வரவழைக்கப்படுவீர்கள் என மார்க்கை எச்சரித்த மத்திய அரசு.

Last Updated : Mar 21, 2018, 06:52 PM IST
பேஸ்புக் தகவல் திருட்டு: மார்க் ஜூக்கர்பெர்க்கை எச்சரித்த மத்திய அரசு  title=

நேற்று முன் தினம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் "கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் உலக முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.

இந்த குற்றச்சாற்று மூலம் ஒரே நாளில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இங்கிலாந்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வரும் 26-ம் தேதிக்குள் முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று இந்திய தகவல் மற்றும் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறியதாவது:- திரு மார்க் ஜுக்கர்பெர்க், நாங்கள் கூறுவதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் பேஸ்புக்கை வரவேற்கின்றோம். அதேவேளையில், இந்தியாவில் பேஸ்புக் அமைப்பின் மூலம் இந்தியர்களின் தரவு திருடப்படுகிறது என்றால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கடுமையான அதிகாரத்தை நாங்கள் பெற்றுள்ளோம். தேவைப்பட்டால் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இந்தியாவிற்கு வரவழைக்கப்படுவீர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என இந்திய சட்ட அமைச்சர் கூறினார்.

மேலும் அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில், ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை போன்றவைக்கு எப்பொழுதும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் சமூக ஊடகங்கள் மூலமாக இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளை குறித்து ஏற்கக்கூடாத செயல்கள் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசாங்கம் இந்த சம்பவத்தை தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாக பார்க்கிறது எனவும் தகவல் மற்றும் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறினார்.

Trending News